Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை கொத்தபேட்டா பகுதியில் நொச்சிகுட்டை ஏரி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு காணப்பட்டது. சில நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக தண்ணீர் நிரம்பியது. ஏரியின் அருகில் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், ஒரு சிலர் ஏரியை உடைத்துவிட்டனர். இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் அருகில் உள்ள லிங்கம்மாள் ஏரிக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் லிங்கம்மாள் ஏரி கடந்த 10 ஆண்டுகளாக துார்வாராமல் உள்ளதால், ஏரி ஏற்கெனவே நிரம்பி கடந்த மாதத்திலிருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
நொச்சிகுட்டை ஏரி மற்றும் லிங்கம்மாள் ஏரிக்கு போதிய அளவுக்கு தண்ணீர் வந்தும் அவற்றை ஏரிகளில் சேமிக்க வழியின்றி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் ஏரியின் கீழ் விவசாயம் செய்பவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. போதிய அளவுக்கு தண்ணீர் வந்தும், அரசு முன்கூட்டியே இந்த ஏரிகளை துார்வாரியிருந்தால், தற்போது ஏரியில் தண்ணீரை தேக்கி இருக்க முடியும். இதனால் பழையபேட்டை பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கும். எனவே இந்த ஏரியை துார்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT