Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

கூட்டுறவுத் துறை மருந்துக் கடைகள் மூலம் - வீடுகளுக்கு நேரடியாக மருந்துகள் விநியோகம் : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

கூட்டுறவு மருந்துக் கடைகளில் இருந்து வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருந்துகளை விநியோகம் செய்யும் திட்டம் வரும் மார்ச்சில் நடைமுறைக்கு வரவுள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், சின்னமனூரில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

சின்னமனூர் நகரப் பொறுப் பாளர் முத்துக்குமார், கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அண்ணா துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேர்தல் பணிக்குழு செய லாளர் கம்பம் செல்வேந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றிபெற கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும்.

கூட்டுறவுத் துறை சார்பில் தேனி மாவட்டத்தில் இன்னும் 60 கடைகள் தொடங்கப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு மருந்து மாத்திரைகள் விற்கப்படும். போன் செய்தால் உடனடியாக மருந்துகளை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கும் திட்டம் வரும் மார்ச் மாதத்துக்குள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், தேர்தல் பணிக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தேனியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநில திட்டக்குழு உறுப்பினர் எல்.மூக்கையா, முன்னிலை வகித்தார். அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்புரை யாற்றினார். பெரியகுளம் எம்எல்ஏ கே.எஸ்.சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x