Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

நீர்வரத்து சரிவால் ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கத்துக்கு அனுமதி :

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து, நேற்று முதல் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், தமிழகத்தை நோக்கி வரும் காவிரியாறு அமைந்துள்ள பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த நீர்வரத்து அதிகரிப்பு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியைக் கடந்தபோது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை அறிவித்தது. இந்த தடை சில வாரங்களாக அமலில் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர்வரத்து பதிவானது. பின்னர், படிப்படியாக நீர்வரத்து குறைந்து வந்தது.

நேற்று பகலில் மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆய்வு மேற்கொண்ட பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் பரிசல் இயக்கத்துக்கு அனுமதி அளித்தனர். கோத்திக்கல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தவர்கள் பரிசலில் பயணித்து காவிரியாற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். நேற்று மாலை ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக பதிவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x