Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

செய்யாறு அருகே தென்னம்பட்டு கிராமத்தில் - மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களில் முளைத்த நெல் மணிகள் :

செய்யாறு அருகே தென்னம்பட்டு கிராமத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களில் நெல் மணிகள் முளைக்க ஆரம் பித்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் வட்டங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், தண்டரை, சுண்டிவாக்கம், சித்தாத்தூர், வடஇலுப்பை, புதேரிபுல்லவாக்கம், வாழ்குடை, முக்கூர், தென்னம்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழை வெள்ளம் வயல்களில் தேங்கியுள்ளன.

தொடர் மழையால் முன்சம்பா பருவத்தில் பயிரிட்டப்பட்டு அறு வடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை வெள்ளத்தில் மூழ்கியதால் நெல் மணிகள் சேதமடைய ஆரம்பித்துள்ளன. அதேநேரம், கடந்த நான்கு நாட்களாக மழை இல்லாத நிலையில் சில பகுதிகளில் மட்டும் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய ஆரம்பித்தது.

இதற்கிடையில், தென்னம்பட்டு கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலத்தில் அறுவடை செய்ய முடியாத நெற்பயிர்களில் இருந்து நெல் மணிகள் முளைக்க ஆரம்பித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x