Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் - ஆலைகள் குறித்து தகவல் அளித்தால் வெகுமதி : தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

சென்னை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒரு முறை பயன்படுத்தி தூக்கிஎறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தடை விதித்தது. இதன்படி, இந்த வகையை சேர்ந்த பிளாஸ்டிக் கப், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பை, நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டு, பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கப்,உணவு பொருள் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், தண்ணீர் பை, இதர பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தயாரிப்பது,சேமித்து வைப்பது, விற்பது, உபயோகிப்பது ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம், தேசியபசுமை தீர்ப்பாயம் ஆகியவை அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன. தடை உத்தரவை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அபராதம் விதிப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆய்வுகள், புகார்கள் அடிப்படையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து சீல் வைக்கவும் உத்தரவு பிறப்பித்து வருகிறது.

இருப்பினும், குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு மத்தியில் சிறிய இடங்களில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இவர்களில் பலரும் அரசு துறைகளிடம் முறையான அனுமதியின்றி தற்காலிகமாக உற்பத்தி செய்கின்றனர்.

எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவல்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் புகார்களை தெரிவிக்கலாம். வாரியத்தின் https://tnpcb.gov.in/contact.php இணையதளத்தில் அவர்களது தொடர்பு விவரங்கள் தரப்பட்டுள்ளன. புகார்களை மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி,வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்யலாம். புகார் கொடுப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்முதலியவற்றை அளிக்க வேண்டும்.இதனால், போலி புகார்கள் தடுக்கப்படும். தகவல் கொடுப்பவர் பற்றியவிவரங்களில் ரகசியம் காக்கப்படும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதில்பங்களிக்கும் பொதுமக்களின் சுற்றுச்சூழல் அக்கறைக்காக பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x