Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் நீதிமன்றத்தில் ஆஜர் :

பாட்னா: ஒருங்கிணைந்த பிஹார் மாநிலத்தில் லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதில் ஊழல் நடைபெற்றது. இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 4 வழக்குகளில் அவருக்கு அடுத்தடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற அவர் கடந்த ஏப்ரலில் விடுதலையானார். தற்போது அவர் டெல்லியில் வசிக்கும் மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியுள்ளார். கால்நடை தீவன ஊழல் விவகாரத்தில் பங்கா கருவூலத்தில் இருந்து ரூ.1 கோடியை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கு பாட்னாவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் உட்பட 44 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் பலர் உயிரிழந்துவிட்டனர். தற்போது 28 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு வந்த லாலு நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். உடல்நிலையை காரணம் காட்டி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x