Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

நாடு முழுவதும் 7,579 பேருக்கு கரோனா தொற்று உறுதி : 543 நாட்களில் மிகவும் குறைவு

நாட்டில் நேற்று ஒரே நாளில் 7,579 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. வைரஸ் பாதிப்புக்கு 236 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் கடந்த 24மணிநேரத்தில் 7,579 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது, கடந்த 543 நாட்களில் இல்லாத குறைவான அளவாகும். பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரை விட அதில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,நேற்று ஒரே நாளில் 12,023 பேர்வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் நாட்டில் தற்போது 1,13,584 பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 236 பேர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,66,147 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், கரோனா தினசரி பாதிப்பு விகிதம் 0.79 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.93 சதவீதமாகவும் உள்ளது. இவை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக 2 சதவீதத்துக்கு கீழே பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x