Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

ஒட்டன்சத்திரத்துக்கு பிஏபி தண்ணீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து - பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை :

ஒட்டன்சத்திரம் பகுதிக்கு பிஏபி தண்ணீரை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து, ஆழியாறு பாசன பகுதி விவசாயிகள் திரண்டு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆழியாறு அணை, பிஏபி திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். இந்த அணையின் மூலம், பழைய ஆயக்கட்டு பகுதியில் 6,366 ஏக்கர் நிலங்களும் புதிய ஆயக்கட்டில் பொள்ளாச்சி கால்வாய் வழியாக 23,488 ஏக்கர் நிலங்களும், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மூலம் 11,181 ஏக்கர் நிலங்களும், ஆழியாறு ஊட்டுக்கால்வாய் வழியாக 4,665 ஏக்கர், சேத்துமடை கால்வாய் வழியாக 5,044 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி கேரளா மாநிலத்தில் 20,000 ஏக்கர் நிலங்களில் பாசனம் நடைபெறுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்துக்கு ஆழியாறு அணை அல்லது திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டுள்ளது.

பாசன நீர் பற்றாக்குறை நிலவிவரும் பிஏபி அணைகளில் இருந்து ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை ஆழியாறு புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகையிட்டனர்.

இது குறித்து, ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச் சங்க செயலாளர் எம்.செந்தில் கூறும்போது, ‘‘நடப்பாண்டில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு 90 நாட்கள் 2,880 மில்லியன் கனஅடி நீரை ஆழியாறு அணையிலிருந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், 2,573 மில்லியன் கன அடி நீரை 80 நாட்கள் மட்டுமே வழங்க அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். நீர் திறக்க அரசாணை பெறப்பட்ட பின்னர் எதிர்பாராத விதமாக பெய்த கடும் மழையால் பாசன நீரை பயன்படுத்த முடியவில்லை.

அரசாணைப்படி 135 நாட்களுக்குள் ஒதுக்கப்பட்ட நீரை பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சாகுபடி செய்வதற்கு ஏற்ப பாசன காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

இந்நிலையில், தற்போது ஒட்டன்சத்திரம் பகுதி குடிநீர் திட்டத்துக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டு இருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இதனால் ஒட்டுமொத்த பிஏபி திட்டமே கேள்விக்குறியாகும். தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x