Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM

மேட்டூர் அணையில் 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் :

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியைக் கடந்த 13-ம் தேதி எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே அளவு நீடித்தது.

அணையில் இருந்து, நீர் மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகு வழியாக 13 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும், நீர் இருப்பு 93.63 டிஎம்சி-யாகவும் உள்ளது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன் தினம் காலை விநாடிக்கு 40 ஆயிரம் கன அடியாகவும், அன்று மாலையில் விநாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து பதிவானது. இந்நிலையில், நேற்று நீர்வரத்தின் அளவில் மேலும் சரிவு ஏற்பட்டது. நேற்று காலை விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடி என்று இருந்த நீர்வரத்து, மாலையில் 24 ஆயிரம்கனஅடியாக சரிந்தது. வெள்ளப்பெருக்கால் அருவி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட ஆர்ப்பரிப்பு ஓசை, நீர்வரத்து சரிவு காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x