Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

ஆள் இல்லாத வீட்டில் மின்கம்பிகளை திருடியபோது - மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு :

குமரி மவட்டம் நாகர்கோவிலில் ஆள் இல்லாத வீட்டில் புகுந்து மின்கம்பிகளை திருடிய 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மீட் தெருவில் பயன்பாட்டில் இல்லாதபாழடைந்த வீடு உள்ளது. பூட்டப்பட்ட இந்த வீட்டு வளாகத்தில் நேற்றுகாலை 2 இளைஞர்கள் இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸார் அங்கு வந்து, வெளிகேட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அந்த இளைஞர்களின் உடல் மீது மின்கம்பி மற்றும் ஸ்டே வயர் கிடந்தது. மின்சாரம் தாக்கியதற்கான காயங்களும் தென்பட்டன. மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மின்கம்பிகள், அகற்றப்பட்ட பின்னர் இருவரது உடல்களும் மீட்கப்பட்டன.

விசாரணையில், அவர்கள் நாகர்கோவில் கோட்டாறு பாறைக்கால் மடத்தெருவைச் சேர்ந்த தொன்போஸ்கோ (20), கருங்கல் அருகே தொலையாவட்டத்தை சேர்ந்த ஜாண் கிறிஸ்டோபர்(25) என தெரியவந்தது. நண்பர்களான இருவரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொன்போஸ்கோ மீது 3 வழக்குகளும், ராபர்ட் மீது கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு மீட் தெருவில் உள்ள வீட்டுக்குள் சுற்றுச்சுவர் ஏறி குதித்து அங்கிருந்த மின்கம்பிகள், வயர்களை இருளில் நின்றவாறே திருடிவிட்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். பின்னர் வீட்டு வளாகத்தில் மின்கம்பத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஸ்டே கம்பியை அறுத்து எடுக்க முயன்ற போது, மின்கம்பத்தில் இணைந்திருந்த மின்கம்பியில் அது உரசியதால் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் வசிக்கும் நிலையில், இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த இடத்தில் மின்சாரம் தாக்கி 2 இளைஞர்கள் இறந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வடசேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x