Published : 24 Nov 2021 03:09 AM
Last Updated : 24 Nov 2021 03:09 AM

காரைக்காலில் அரசுப் பள்ளிகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் :

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் குறிப்பாக, 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு 40 சதவீதம் வரை ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுத் தேர்வுகளுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், போதுமான அளவில் ஆசிரியர்களை நியமிக்காவிட்டால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். எனவே, உடனடியாக ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் கூறியது, வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அரசுப் பள்ளிகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமை சூழலில் உள்ள மாணவர்கள் உணவுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ரூ.1 கட்டணப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் உள்ள மத்திய சமையல் கூடம் எந்தவித பராமரிப்புமின்றி உள்ளது. இதை சீரமைக்க வேண்டும். அரசு உதவிபெறும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஓராண்டுக்கான ஊதியம் நிலுவையில் உள்ளது. ஊதிய நிலுவையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்கால் பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் அ.வின்சென்ட், செயலாளர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x