Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

டெல்லியில் காற்று மாசு குறைந்ததால் கட்டுமான பணிக்கான தடை நீக்கம் :

புதுடெல்லி: கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் கட்டிடங்களை இடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாள்தோறும் காற்று தரக் குறியீடு சராசரியாக 400 புள்ளிகளாக பதிவாகி வந்த நிலையில் நேற்று 307 ஆக குறைந்தது.

இதைத் தொடர்ந்து கட்டுமான பணிக்கான தடையை முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு நீக்கியுள்ளது. எனினும் அத்தியாவசியமற்ற சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் வரும் 26-ம் தேதி வரை டெல்லியில் நுழைய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறும்போது, "தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கட்டுமான பணிக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. காற்று மாசு அதிகரிப்பை கட்டுப்படுத்த 14 வகையான வழிகாட்டு நெறிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். பொது போக்குவரத்துக்காக சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் 1,000 தனியார் பேருந்துகள் டெல்லியில் இயக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x