Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

தெருநாய்களால் பாதிக்கப்படுவோர் புகார் அளிக்க அழைப்பு :

கோவையில் தெருநாய்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் அந்தந்த வார்டு சுகாதார அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெரு நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

தெரு நாய்களால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சீரநாயக்கன்பாளையத்திலும், ஒண்டிப்புதூர் பகுதியிலும் ‘கருத்தடை அறுவைசிகிச்சை மையங்கள்’ செயல்பட்டு வருகின்றன.

தெருநாய்களால் பாதிக்கப் படும் பொதுமக்கள் அந்தந்த வார்டு சுகாதார அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் கருத்தடை அறுவைசிகிச்சை மையங்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “மாநகரில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. சீரநாயக்கன் பாளையம், ஒண்டிப்புதூர் மையங்களில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் மூலம் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, அவற்றின் வாழ்விடங்களிலேயே மீண்டும் விடப்பட்டு வருகின்றன. அதற்கு உரிய கட்டணத்தை மாநகராட்சி வழங்கி வருகிறது.

நடப்பாண்டில் இதுவரை 1600-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. தெருநாய்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் உடனடியாக அந்தந்த வார்டுகளில் உள்ள சுகாதார அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். சிகிச்சை அளிக்கும் நிறுவனத்தினரின் தொடர்பு எண்கள் அனைத்து வார்டு அலுவலகங்களிலும் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x