Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

மாணவியருக்கு பாலியல் தொல்லை - அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது : நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

ஆன்லைன் வகுப்பின்போது, மாணவியரை நடனமாடச் சொல்லி, பாலியல் தொந்தரவு கொடுத்த ஈரோடு ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் செயல்படும், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் திருமலைமூர்த்தி (49). இவர் கடந்த செப்டம்பர் மாதம் ஆன்லைன் வகுப்பின் போது, மாணவிகளை நடனமாடச் சொன்னதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் சைல்டு லைன் அமைப்பில் மாணவியர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஞானசேகரன், ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஆசிரியர் திருமலைமூர்த்தியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதனிடையே, ஆசிரியர் திருமலைமூர்த்தியின் செயல்பாடுகள் குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் கணேசனிடம் இரு மாதங்களுக்கு முன்பே புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவியர் நேற்று புகார் தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

குற்றத்தை மறைக்க உதவிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெற்றோர் மற்றும் மாணவியர் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். பெருந்துறை - கோபி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பெற்றோர் மற்றும் மாணவியரின் புகாரையடுத்து, தலைமை ஆசிரியர் கணேசனை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x