Published : 23 Nov 2021 03:07 AM
Last Updated : 23 Nov 2021 03:07 AM

கடற்படை தினத்தையொட்டி - கடலோர காவல்படையினர் 100 கி.மீ சைக்கிள் பயணம் :

கடற்படை தினத்தையொட்டி கடலோர காவல்படை சார்பில் 100 கி.மீ சைக்கிள் பயணமாக புதுச்சேரி வந்தனர். கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

1971-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது.

அப்போது டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்திற்குள் நுழைந்த இந்திய கடற்படையினர் அங்கிருந்த போர்க் கப்பல்களை தாக்கி அழித்தனர். இந்த போரில் இந்தியா வெற்றி பெற கடற்படையினரின் அதிரடி தாக்குதல் முக்கிய காரணமாகும். இதையடுத்து ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதையொட்டி இந்திய கடலோர காவல்படை சார்பில் கமாண்டன்ட் ரோகித் ஷா தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் கல்பாக்கம் அனுபுரத்திலிருந்து நேற்று காலை 6 மணிக்கு சைக்கிளில் புதுவைக்கு புறப்பட்டனர்.

நண்பகல் 12 மணிக்கு புதுவை வந்த அவர்கள் புதுவை கடற்கரை சாலையில் உள்ள கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்பயணம் தொடர்பாக அவர்கள் கூறுகையில், “100 கி.மீ தொலைவுக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்கிறோம். 'ஃபிட் இந்தியா' மற்றும் பங்கேற்பாளர்களிடையே நட்புறவு, விளையாட்டுத்திறன் ஆகியவற்றை அதிகரிக்கும் நடவடிக்கையாக இப்பயணம் இருந்தது” என்று குறிப்பிட்டனர்.

முன்னதாக, புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத் தில் நடந்த நிகழ்வில் தலைமைச்செயலர் அஸ்வனிக்குமார், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படையின் கொடி அதிகாரி வி.எஸ்.எம்., ஆர்.ஏ.டி.எம். புனித் சாதா, ஆட்சியர் பூர்வா கார்க் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது தலைமைச்செயலர் அஸ்வனிக்குமார் கூறுகையில், “வீரர்களின் தியாகங்களை இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டுவது மட்டுமல்லாமல், இந்திய கடற்படையின் பணிகளையும், தியாகங்களையும் கண்டறிய இந்நிகழ்வுகள் உதவும்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x