Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM
மழைச் சேதங்களை பார்வையிட வந்துள்ள மத்தியக் குழுவினர் புதுச்சேரியில் நேற்றிரவு ஆளுநர், முதல்வர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று ஆய்வு செய்கின்றனர்.
புதுவை மாநிலத்தில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் புதுவை, காரைக்காலில் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள், படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன. நகர பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் புகுந்து மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள், மணிலா, கரும்பு, பூச்செடிகள் அழுகி சேதமடைந்துள்ளது. தமிழகத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட வரும் மத்தியக்குழுவினர் புதுவையையும் பார்வையிட வேண்டும் என ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
தமிழகத்தில் மழை வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் வந்திருந்தனர். இந்த குழுவினர் இரு பிரிவுகளாகப் பிரிந்து, தமிழகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் ராஜீவ்சர்மா தலைமையில் மத்திய வேளாண்துறையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் விஜயராஜ்மோகன், மத்திய போக்குவரத்து மண்டல அதிகாரி ரணஞ்ஜெய்சிங், நகர்ப்புற அமைச்சகத்தின் சார்பு செயலர் வரப்பிரசாத் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை புதுச்சேரி வந்தனர்.
தொடர்ந்து, மத்தியக் குழுவினர் புதுச்சேரி தலைமை செயலகத்தில் தலைமைச்செயலர் அஸ்வனி குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது புதுச்சேரி, காரைக்காலில் மழையால் ஏற்பட்ட சேத விவரங்களை புதுவை அதிகாரிகள் பட்டியலிட்டனர்.
தொடர்ந்து நேற்று இரவு ராஜ்நிவாஸில் ஆளுநர் தமிழிசை, சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி ஆகியோரை சந்தித்து பேசினர்.
இதற்கிடையே, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் மத்தியக் குழுவிடம் அதிமுக கிழக்கு மாநில செயலர் அன்பழகன், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு முதற்கட்டமாக ரூ. 400 கோடி நிவாரணம் தர வேண்டும்" என்று கோரிக்கை மனு அளித்தார்.
அதைத்தொடர்ந்து இரவு ஓட்டல் அண்ணாமலையில் மத்தியக்குழுவினர் தங்கினர். இன்று காலை 8.30 மணிக்கு புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பாகூர் உள்ளிட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிடுகின்றனர்.காரைக்காலிலும் இன்று இக்குழு ஆய்வு மேற்கொள்கிறது.
மேலும், மத்தியக்குழுவினர் இன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகங்கணாங்குப்பம் பகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT