Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழப்பு :

பெரம்பலூர் அருகே நேற்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் மற்றும் மதுராந்தகம் பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 6 பேர் ஒரு காரில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே நேற்று அதிகாலை 4 மணியளவில் வந்தபோது, அயன்பேரையூர் பிரிவு சாலை பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு மைல் கல் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த செய்யூரைச் சேர்ந்த பாபு மகன் ஆனந்த்(27), மதுராந்தகம் சித்தம்மூரைச் சேர்ந்த சூரியா என்கிற தவுலத்(30) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், கார் உரிமையாளரும், ஓட்டுநருமான செய்யூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன்(35), செல்வராஜ் மகன் ரமேஷ்(49), மதுராந்தகத்தைச் சேர்ந்த குமார் மகன் செல்வமணி(28), தயாளன் மகன் லட்சுமணன்(30) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x