Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

மனு அளிக்க மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த தம்பதிகள் :

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, எச்சரித்து அனுப்பினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்சியர் வே. விஷ்ணு தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்களை அளிக்க வந்தவர்களை அலுவலகத்தின் நுழைவு பகுதியில் போலீஸார் சோதனையிட்டு அனுப்பினர். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே பழவூர் கண்ணங்குளத்தை சேர்ந்த மெக்கானிக் செல்வகுமார் (42) என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்தார். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அப்போது செல்வகுமார் கூறும் போது, ``எங்கள் வீட்டில் நடைபெற்ற நகை திருட்டு தொடர்பாக பெண் ஒருவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தோம். ஆனால், போலீஸார் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இது தொடர் பாக, மனு அளிக்க வந்தோம்” என தெரிவித்தார்.

இதுபோல், விக்கிரமசிங்கபுரம் அருகே அடையகருங்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துவேல் முருகன், இவரது மனைவி ராணி ஆகியோர் மனு அளிக்க வந்தனர். அவர்களது உடைமைகளை போலீஸார் சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த பையில் மண்ணெண்ணெய் கேன் இருந்தது. அதை போலீஸார் கைப்பற்றினர். தங்களுக்கு சொந்தமான நிலப்பிரச்சினையில் பல ஆண்டு களாக தீர்வு காணப்படாததால் விரக்தியில் மண்ணெண்ணெய் எடுத்துவந்ததாக அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x