Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM
திருவண்ணாமலை: தி.மலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா, 16-வது நாளாக நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் கடந்த 19-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மகா தீபத்தை 4-வது நாளாக நேற்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் கரேனா தடுப்பு நடவடிக்கையாக அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் தெப்பல் உற்சவம் கடந்த 20-ம் தேதி தொடங்கி 3-வது நாளாக நேற்று நடைபெற்றது. முதல் நாளன்று சந்திரசேகரர் மற்றும் 2-வது நாளன்று பராசக்தி அம்மனின் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து, 3-வது நாளான நேற்று வள்ளி தெய்வானை சமேத முருகர் சிறப்பு அலங்காரத்தில் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17 நாட்களாக நடைபெற்று வந்த கார்த்தை தீபத் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT