Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக - சிவகிரி நூலகத்தில் இணைய வசதியுடன் கணினி சேவை : மாவட்ட நிர்வாகத்திற்கு வாசகர்கள் கோரிக்கை

போட்டித்தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், சிவகிரி அரசு கிளை நூலகத்திற்கு என வழங்கப்பட்ட 8 கணினிகளை இணைய வசதியுடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் அரசு கிளை நூலகம் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த நூலகத்தில் 5000-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் இந்நூலகத்திற்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், நாளிதழ்கள், பருவ இதழ்களைக் கொண்ட இந்நூலகம் சிவகிரி மற்றும் சுற்றுவட்டார வாசகர்கள், அதிகம் விரும்பும் இடமாக நீடித்து வருகிறது.

டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, வங்கி, ரயில்வே பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் பயன் பெறும் வகையில், கடந்த மார்ச் மாதம் வாசகர் பயன்பாட்டுக்காக 8 கணினிகள் நூலகத்திற்கு வந்தன. ஆனால், அவை இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப் படாததால், வாசகர்கள் மற்றும் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிவகிரி நண்பர்கள் இலக்கிய வட்ட அமைப்பாளர் எஸ்.கே.கார்த்திகேயன் கூறியதாவது:

கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது வாசகர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியுள்ளனர். நூலகத்திற்கு அதிக வாசகர்கள் வரும் வகையிலும், போட்டித்தேர்வுகளை எதிர்கொள்பவர்கள் பயன்பெறும் வகையிலும் இணைய வசதியுடன் கணினிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஏற்கெனவே வாங்கப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்டுள்ள பருவ இதழ்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலக்கிய புத்தகங்களை கூடுதலாக சேர்க்க வேண்டும். சிறந்த எழுத்தாளர்களின் நூல்களை இளம் தலைமுறையினர் வாசிக்கும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x