Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

ஓசூர் வனக்கோட்டத்தில் - அதிகனமழையால் 200 ஏரிகள் நிரம்பின : விலங்குகளின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

ஓசூர் வனக்கோட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அதிகனமழை காரணமாக வனத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், விலங்குகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகியுள்ளது என ஓசூர் வனச்சரகர் தெரிவித்துள்ளார்.

ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அதிகனமழை காரணமாக வனச்சரகங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏரிகள், 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

இதுதொடர்பாக ஓசூர் வனச்சரகர் ரவி கூறியதாவது:

ஓசூர் வனக்கோட்டத்தில் கடந்த சிலநாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. மழையால் வனப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக ஓசூர் வனச்சரகத்தில் உள்ள சானமாவு, அத்திமுகம், அமுதகொண்டப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட 21 காப்புக்காடுகளில் உள்ள 30 ஏரிகளும் மற்றும் 5 தண்ணீர் தொட்டிகள், கசிவுநீர் குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.

இதில் அத்திமுகம் காப்புக் காட்டில் உள்ள உங்கட்டி ஏரி 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உள்ளது. அதேபோல பல ஆண்டுகளாக வறண்ட நிலையில் இருந்த பல ஏரிகளும் நடப்பாண்டு அதிகனமழையால் நிரம்பி உள்ளன. இதனால், வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளை தேடிவரத்தொடங்கியுள்ளன. வனவிலங்குகளின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x