Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி காந்திமதி. இவர்கள், தங்களுக்கு சொந்தமான 150 ஆடுகளை அக்கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ள திட்டுப்பகுதியில் மேய்ப்பது வழக்கம். மாலையில் அங்கேயே பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு, ஃபைபர் படகில் தம்பதியர் வீடு திரும்புவார்கள்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி தம்பதியர் திட்டுப் பகுதியில் இருந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு அதிகரித்ததால், ஆடுகளுடன் கரை திரும்ப முடியாமல் 4 நாட்களாக தம்பதியர் தவித்து வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன் உத்தரவின்பேரில், வட்டாட்சியர் சண்முகம், துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், தீயணைப்புத் துறை அலுவலர் ஜோதி மற்றும் தீயணைப்பு வீரர்கள் நேற்று 4 ஃபைபர் படகுகளில் அங்கு சென்று, கணேசன், காந்திமதி மற்றும் 150 ஆடுகளை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். மேலும், தம்பதி அளித்த தகவலின்பேரில், திட்டுப் பகுதியில் சிக்கி தவித்து வரும் 12 புள்ளி மான்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT