Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் - நதிநீர் உரிமையை பறி கொடுத்து வருகிறோம் : பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் குற்றச்சாட்டு

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி வேலூரில் நேற்று நடைபெற்றது.

பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பாஜக நிர்வாகி களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளது. இந்திய அளவில் பாஜக மீது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தேர்தலின்போது சிலிண்டருக்கு ரூ.100 குறைப்போம் என வாக்குறுதி அளித்தார்கள். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி 22-ம் தேதி (இன்று) முதல் டிசம்பர் மாதம் 3-ம் தேதி வரை பாஜக சார்பில் தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து மத்திய குழு ஆய்வு செய்ய வுள்ளது. அந்த குழு பரிந்துரையின் அடிப்படையில் நிவாரண நிதி வழங் கப்படும்.

பருவமழையால் பாலாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் ஓடும் பாலாற்றில் இதுவரை ஒரு தடுப்பணை கூட கட்ட வில்லை. தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்த அதிமுக-திமுக தடுப் பணையை கட்டி நீரை சேமிக்க திட்டமிடவில்லை. இது பற்றி மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணையில் 110 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கினால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் வரும். இதன் மூலம் 5 மாவட்டங்கள் பயன்பெறும். ஆனால், 110 அடி வருதற்குள்ளேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நதிநீர் உரிமையை பறி கொடுத்து வருகிறோம்’’ என்றார்.

அப்போது, பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன், மாவட்டத் தலைவர் தசரதன், மாவட்ட துணைத்தலைவர் ஜெகன், மாவட்ட பொதுச்செயலாளர் பாபு, செயலாளர்கள் சரவணன், தீபக், சங்கர், மோகன், மண்டலத் தலைவர்கள் நந்தகுமார், முருகன், தேவராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x