Published : 22 Nov 2021 03:09 AM
Last Updated : 22 Nov 2021 03:09 AM

வாணியம்பாடியில் பொதுமக்கள் மறியல் :

வாணியம்பாடியில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து வாணியம்பாடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை கனமழை பெய்தது. குறிப்பாக, வாணியம்பாடி, ஆலங் காயம், ஆம்பூர், வடபுதுப்பட்டு போன்ற பகுதிகளில் மிக கனமழை பெய்தது. இதனால், தாழ்வானப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட மக்களை வருவாய்த்துறையினர் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். இதில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் போதுமான அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர் உள்ளிட்டவைகள் செய்து தரவில்லை என குற்றஞ்சாட்டி நேற்று 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் ஏரி, செட்டியப்பனூர் ஏரி முழுமையாக நிரம்பி அதிலிருந்து வெளியேறிய உபரி நீர் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்ததால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும் மழை குறைந்து 2 நாட்கள் ஆகியும் மழைநீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கா ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் வாணியம்பாடியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நின்றதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘செட்டியப்பனூர் ஏரி, கோவிந்தாபுரம் ஏரி நிரம்பி உபரி நீர் அருகாமையில் உள்ள திருவள்ளுவர் நகர், சர்ச் தெரு, துரைசாமி வீதி, ஜார்ஜ் பேட்டை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 18-ம் தேதி இரவு நுழைந்தது. மழை குறைந்து 2 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியவில்லை. தேங்கிய நீரில் விஷபூச்சிகள், பாம்புகள் ஊர்ந்து வருகின்றன.

குழந்தைகளை வைத்துக் கொண்டு அவதிப்படுகிறோம். 2 நாட்களாக மின் விநியோகமும் தடைபட்டுள்ளது. எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும், தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தீர்வு காணாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

இந்த தகவலறிந்த வாணி யம்பாடி நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர். இதனையேற்று நீண்ட போராட்டத்துக்கு பிறகு பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x