Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

நாட்டின் தூய்மையான நகரமாக 5-வது முறையாக இந்தூர் தேர்வு :

மத்திய அரசின் வருடாந்திர தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பில் 5-வது முறையாக மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டில் தூய்மையை பராமரிக்கும் நோக்கத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கான நகரங்கள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.

இதில் நாட்டில் மிகவும் தூய்மையான நகரமாக மத்தியபிரதேசத்தை சேர்ந்த இந்தூர், தொடர்ந்து 5-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத், ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.

கங்கைக் கரையில் அமைந்துள்ள மிகவும் தூய்மையான நகரமாக (தூய்மையான கங்கை நகர்) வாரணாசி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மிகவும் தூய்மையான மாநிலமாக சத்தீஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை நேற்று அறிவித்தது. விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (நவ. 21) வழங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x