Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM

வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது - விவசாயிகளின் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி : சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டு

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது விவசாயிகளின் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றிருப்பது உண்மை, நீதி, அகிம்சைக்கு கிடைத்த வெற்றி. ஜனநாயகத்தில் எல்லா முடிவுகளும் எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரையும் கலந்து ஆலோசித்த பின்னரே எடுக்கப்பட வேண்டும். எதிர்காலத்திலாவது வேளாண் சட்டங்கள் போன்ற அவசர முடிவுகளை எடுக்காமல் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாடம் கற்றிருக்கும் என்று நம்புகிறேன்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில்: விவசாயிகள் சத்தியாகிரக போராட்டம் மூலம் ஆணவத்தை தலைகுனிய வைத் துள்ளனர். அநீதிக்கு எதிரான இந்த வெற் றிக்கு வாழ்த்துகள். ஜெய் ஹிந்த், ஜெய் கிசான்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி: விவசாயிகளின் நல னுக்கு முற்றிலும் எதிராக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே சமயத்தில், இந்தப் போராட்டத்தில் பங்கேற்று தங்கள்இன்னுயிரை நீத்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தியா கத்தை நாம் மறந்துவிடக் கூடாது. ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகளை பெரும் இன்னலில் தள்ளிய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்: வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டிருப்பது விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் மகத்தான வெற்றி ஆகும். இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு பொன்னான நாள். ஜனநாயகத்தில் மட்டும் தான் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கப்படும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். எனவே, இதனை ஒட்டுமொத்த ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும். இந்த முடிவை மத்திய அரசு முன்பே எடுத்திருந்தால் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி:

அரசின் அடக்குமுறைக்கு எதிராக மன உறுதியுடன் போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது உங்களின் வெற்றி. இந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் உண்மையான வலிமைக்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ்: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே, வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x