Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 17, 18 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது:
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெறும். இது, வரும் 18-ம் தேதியையொட்டி தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோரப் பகுதியில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும்.
மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இன்று (நவ.16) மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதனால், தென்கிழக்கு அரபிக் கடலுக்கும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் இடையில் வளி மண்டலத்தில் வடக்கு கேரளா, வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் காற்று திசை மாறும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். அதி கனமழைக்கு இப்போது வாய்ப்பில்லை. ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவ.17, 18 தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 19-ம் தேதி வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 17, 18 தேதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகள், கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 28 செ.மீ.தான் தற்போது 54 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் பெய்யக்கூடிய இயல்பான மழை அளவான 44 செ.மீ. மழை இப்போதே பதிவாகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT