Published : 16 Nov 2021 03:08 AM
Last Updated : 16 Nov 2021 03:08 AM
கரோனா பரவல் காரணமாக கடந்த 20 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வழக்கறிஞர்கள் நேற்று முதல் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அனைத்து வழக்கு விசாரணைகளும் ஆன்லைன் மூலமாக நடைபெற்றன. குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்த கட்டுப்பாடுகள் காரணமாக இளம் வழக்கறிஞர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், வழக்கமான நடைமுறையில் வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பிலும், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பிலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கரோனா பாதிப்புகள் குறைந்து வருவதைக் கருத்தில்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நேற்று முதல் வழக்கறிஞர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT