Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த - டெல்லியில் இரண்டு நாள் பொது முடக்கம் : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை

டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசை கட்டுப்படுத்த 2 நாள் பொது முடக்கத்தை அமல்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. தீபாவளியின் போது பட்டாசு வெடித்தது, பஞ்சாப், ஹரியாணா ஆகிய பக்கத்து மாநிலங்களில் விவசாயிகள் பயிர்கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட

வையே இதற்கு முக்கிய காரணம்என கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஆதித்யா துபே, டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “காற்று மாசை கட்டுப்படுத்த பயிர் கழிவுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிர் கழிவுகளை அழிக்கும் பணியில் 2 லட்சம் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பஞ்சாபில் பயிர்களை எரிப்பதால் அதிக அளவில் புகை வெளியேறுகிறது. இதைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வாதாடினார்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறும்போது, “டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க விவசாயிகள் மட்டுமே காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். காற்று மாசு அதிகரிக்க பயிர் கழிவுகள் எரிப்பது 40 சதவீதம்தான் காரணம். பட்டாசு வெடித்தல், வாகனங்கள் வெளியிடும் புகை யைக் கட்டுப்படுத்த என்ன நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது? காற்று மாசை கட்டுப்படுத்த உடனடியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். டெல்லியில் 2 நாள் பொது முடக்கம் அறிவிப்பது குறித்தும் பரிசீலிக்கலாம்” என்றார்.

டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மேரா, “காற்று மாசு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பயிர் கழிவுகளை எரிப்பதுதான் முக்கிய காரணமாக உள்ளது” என்றார்.

இதுகுறித்து நீதிபதி சூர்யகாந்த் கூறும்போது, “காற்று மாசு அதிகரிக்க விவசாயிகளே காரணம் என அனைவரும் கூறுகிறீர்கள். டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்தனர். இதைத் தடுக்காமல் டெல்லி போலீஸார் என்ன செய்தனர்?” என கேள்வி எழுப்பினார்.

நீதிபதி சந்திரசூட் கூறும்போது, “டெல்லியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. காற்றுமாசு காரணமாக பள்ளிக்கு செல்லும் அனைத்து குழந்தைகளின் நுரையீரலும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண டெல்லி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?” என கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x