Published : 13 Nov 2021 03:07 AM
Last Updated : 13 Nov 2021 03:07 AM
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் சார்பில் 200 சிறப்பு மருத்துவ முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை ஒட்டியும் வங்கக் கடலில்உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தாலும் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழையும் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்துவருகிறது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை சீர்செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
கடந்த நவ.7-ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர், மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் பருவமழைக் காலத்தை முன்னிட்டு ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும், 200 வார்டுகளிலும் ஒரு வார்டுக்கு 2 சிறப்பு முகாம்கள் என மொத்தம் 400 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
கூடுதலாக 200 சிறப்பு முகாம்கள்
அதன்படி, மாநகராட்சி சார்பில்200 வார்டுகளிலும் முதல்கட்டமாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங் கேற்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT