Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் - கரூர் வைஸ்யா வங்கி லாபம் ரூ.165 கோடி :

கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), நடப்பு நிதியாண்டில் செப்டம்பருடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் ரூ.165 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது 43.5 % அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கியின் லாபம் ரூ.115 கோடியாக இருந்தது.வங்கியின் நிகர வட்டி வருமானம் ரூ.680 கோடி. இது 13.1% அதிகம் ஆகும்.

வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.1,19,260 கோடியாகும். ஆண்டுதோறும் 7% வளர்ச்சி எட்டப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வங்கியின் வர்த்தகம் ரூ.1,11,530 கோடியாக இருந்தது. வங்கி வழங்கிய மொத்த கடன் ரூ.3,442 கோடி அதிகரித்து ரூ.53,850 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வழங்கப்பட்ட கடன் ரூ.50,408 கோடியாகும்.

நகைக் கடன் வழங்கும் அளவும் 21% வளர்ச்சியை எட்டியுள்ளது. மொத்தம் ரூ.13,460 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மொத்த சேமிப்பு 7% வளர்ச்சியை எட்டியுள்ளது. காலாண்டில் ரூ.4,288 கோடி கூடுதலாக திரட்டப்பட்டு சேமிப்பு ரூ.65,410 கோடியை எட்டியது. கடந்த ஆண்டு இதே காலத்தில் சேமிப்பு ரூ.61,122 கோடியாக இருந்தது.

வங்கியின் வாராக் கடன் 55 புள்ளிகள் சரிந்து ரூ.3,972 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.3,998 கோடியாக இருந்தது.

நிகர வாராக் கடன் ரூ.1,538 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,719 கோடியாக இருந்தது.

செப்டம்பருடன் முடிவடைந்த 6 மாதத்தில் வங்கி ஈட்டிய நிகர லாபம் 24.5 % அதிகரித்து ரூ.274 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.220 கோடியாக இருந்தது என்று வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பி. ரமேஷ் பாபு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x