Published : 02 Nov 2021 03:09 AM
Last Updated : 02 Nov 2021 03:09 AM

பட்டாசுக்கு கொல்கத்தா நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம் :

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் பட்டாசு வெடிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

மேற்குவங்கத்தில் தீபாவளி, காளி பூஜை, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க மாநில அரசு அனுமதி அளித்தது. ஆனால், சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுக்க டிசம்பர் 31-ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடியாது. போலியான பசுமை பட்டாசுகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் அது தொடர்பான பொருட்கள் தங்கள் மாநிலத்துக்குள் கொண்டுவராமல் தடுப்பதற்கான வழிகளை மேற்கு வங்க அரசு ஆராய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு விதித்த தடையை ரத்து செய்வதாக அறிவித்தனர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x