Last Updated : 25 Oct, 2021 03:07 AM

 

Published : 25 Oct 2021 03:07 AM
Last Updated : 25 Oct 2021 03:07 AM

கர்நாடகாவில் முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து இளைஞர் கவுரவக் கொலை: காதலியின் சகோதரர் உட்பட 3 பேர் கைது

பெங்களூரு

கர்நாடகாவில் விஜயபுரா அருகே முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து இளைஞர் கவுரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் அலமேலா அருகேயுள்ள பெக்கனூருவைச் சேர்ந்தவர் ரவி நிம்பரகி (32). இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணும் க‌டந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு கடந்த செப்டம்பரில் திருமண ஏற்பாடுகள் நடந்த போது, ரவி தனது பெற்றோருடன் சென்று பெண்ணின் குடும்பத்தாரிடம் பேசியுள்ளார். அப்போது அவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து கொடுக்க முடியாது என பெண்ணின் பெற்றோர் மறுத்துள்ளனர். மேலும், காதலை கைவிடுமாறும் மிரட்டியதாக தெரிகிறது. ஆனாலும் அவர்களின் காதல் தொடர்ந்தது.

இந்த சூழலில், கடந்த 21-ம்தேதி, பெண்ணின் உறவினர் அஹமது ஃபாரிக் என்பவர் ரவியை செல்போனில் தொடர்பு கொண்டு நேரில் வருமாறு அழைத்துள்ளார். பின்னர், அவரை தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் சென்று பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப் பெண், விஜயபுரா காவல் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 23-ம்தேதியன்று ரவி ஊருக்கு ஒதுக்கு புறமான கிணற்றில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். முதல்கட்ட விசாரணையில் ரவி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து விஜயபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்.டி.ஆனந்த்குமார் கூறும்போது, “ரவி நிம்பரகி வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் சகோதரர், தாய் மாமா மற்றும் உறவினர்கள் 5 பேர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று, கிணற்றில் உடலை வீசியுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது சகோதரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.

இதே மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞரும், அந்தப் பெண்ணும் பெண்ணின் குடும்பத்தினரால் எரித்து கொலை செய்யப்பட்டனர். கடந்த வாரத்தில் பெலகாவியில் இந்து பெண்ணை காதலித்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்‍பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x