Published : 25 Oct 2021 03:11 AM
Last Updated : 25 Oct 2021 03:11 AM

விபத்தில் உயிரிழந்த எஸ்ஐ குடும்பத்தாருக்கு - காக்கும் கரங்கள் சார்பில் ரூ.6.72 லட்சம் நிதியுதவி :

காக்கும் கரங்கள் சார்பில், விபத்தில் உயிரிழந்த கார்த்திகேயன் மனைவி விஜயலட்சுமியிடம் ரூ.6.72 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

கே.வி.குப்பம்

சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் குடும்பத் தாருக்கு ‘காக்கும் கரங்கள்’ சார்பில் ரூ.6.72 லட்சம் நிதியுதவி நேற்று வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த அலங்கநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (51). இவர், மேல்பட்டி காவல் நிலையத்தில் எஸ்பி தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மேல்பட்டி காவல் நிலையம் நோக்கிச்சென்றார்.

அப்போது, சென்னாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அவ் வழியாக காட்பாடிக்கு தக்காளி லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் கார்த்திகேயன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், கடந்த 1993-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து ‘காக்கும் கரங்கள்’ என்ற குழுவை அமைத்து அவர்களுடன் பணியில் சேர்ந்தவர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த கார்த்திகேயன் கடந்த 1993-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்ததால் அவரது குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்க காக்கும் கரங்கள் குழுவினர் முடிவு செய்து அதற்கான நிதியை திரட்டி வந்தனர்.

இதையடுத்து, கார்த்திகேயன் குடும்பத்தாருக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் செந்தில்குமாரி வரவேற்றார். குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமை வகித்து, விபத்தில் உயிரிழந்த கார்த்திகேயன் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் ரூ.6.72 லட்சத்துக்கான காசோலை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x