Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

மும்பையில் 60 மாடி கட்டிடத்தில் தீ கீழே குதித்த காவலாளி உயிரிழப்பு :

மும்பை: மத்திய மும்பையில் உள்ள குர்ரே சாலையில் அவிக்னா பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இது 60 மாடிகளைக் கொண்டது. இந்நிலையில் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு இந்தக் கட்டிடத்தின் 19-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில் 19 மற்றும் 20-ம் மாடியில் உள்ள வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உதவியுடன் சில மணி நேரத்தில் அவர்கள் தீயை அணைத்தனர். கட்டிடத்தில் இருந்து 26 பேர் மீட்கப்பட்டனர்.

இதனிடையே அந்தக் கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த அருண் திவாரி (30), தீவிபத்து பற்றிய தகவலைக் கேட்டு மேலே சென்றார். இதில் தீயில் சிக்கிக் கொண்ட அவர், தப்பிக்கும் முயற்சியாக 19-வது மாடியில் உள்ள ஒரு பால்கனியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அருண் திவாரி உயிரிழந்தார்.

மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x