Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனடியாக வழங்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு அகவிலைப்படி அறிவித்தபோதெல்லாம் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கும் அதிமுக அரசு அளித்தது. ஆனால், ஏற்கெனவே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதிமுதல் அளித்தபோது, அதை மாநிலஅரசின் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விரிவுபடுத்தாமல், அடுத்தஆண்டு ஏப்ரல் முதல் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. பின்னர் சங்கங்கள் வலியுறுத்தியதால், 3 மாதங்கள் முன்னதாக, அதாவது ஜனவரி முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்த சூழலில் தீபாவளி பரிசாக, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் மேலும் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ளது. அதாவது ஜூலை 1 முதல் மத்திய அரசுஊழியர்கள் 31 சதவீத அகவிலைப்படி பெறப்போகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தலுக்கு பிறகு, விலைவாசி உயர்வை ஓரளவு ஈடுகட்ட வழங்கப்படும் அகவிலைப்படியையே நிறுத்தி வைப்பது ஏற்கக்கூடியது அல்ல.
எனவே, மத்திய அரசுபோல,மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கான 14 சதவீத அகவிலைப்படியை தீபாவளி பரிசாக உடனே வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT