Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM

கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்ற கடைக்கு சீல் : உணவு பாதுகாப்பு, வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடைக்கு நேற்று சீல் வைத்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன்.

கோவை/ சென்னை

கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறை, வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து சீல் வைத்தனர்.

கோவை அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ் பகுதியில் செயல்படும் தனியார் ஐஸ்கிரீம் கடையில், ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை, வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து, நேற்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபற்றி சுகாதாரத் துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு:

சம்பந்தப்பட்ட கடையில் கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், உணவு தயாரிக்கும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டன. அந்த இடம் சுகாதாரமின்றி இருந்தது. ஈக்கள்அதிக அளவில் காணப்பட்டன. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வுசெய்து அறிக்கை பெறப்படவில்லை. காலாவதி உணவுப்பொருள் அழிக்கப்பட்டது.

உணவு கையாள்பவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை. அவர்கள் முறையான முகக் கவசம், தலைஉறை, கையுறையும் அணியவில்லை. உணவு பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம்பிரதான இடத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. புகார் அடிப்படையில் ஆய்வு செய்ததில் இத்தகைய குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், ஐஸ்கிரீம் கடைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்ச்செல்வன் கூறியபோது, ‘‘ஐஸ்கிரீம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மதுபான மாதிரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x