Published : 21 Oct 2021 03:05 AM
Last Updated : 21 Oct 2021 03:05 AM
சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் (79) அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது. அதன்பின் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். இதையடுத்து அமரீந்தர் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமரீந்தர் சிங் பாஜகவில் சேர்வார் என தகவல் வெளியானது. இதை அவர் மறுத்தார். இந்த சூழ்நிலையில் அமரீந்தர் சிங் சார்பில் அவரது ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பஞ்சாபின் எதிர்காலத்துக்கான போர் தொடங்குகிறது. பஞ்சாப் மற்றும் வாழ்வாதாரத்துக்காக சுமார் ஓராண்டாக போராடி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்வதற்கு புதிய அரசியல் கட்சியை தொடங்குவது பற்றி விரைவில் அறிவிப்பேன்.
விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு மத்திய அரசு தீர்வு கண்டால், வரும் பஞ்சாப் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம். மேலும் அகாலி குழுக்கள் குறிப்பாக திண்ட்சா மற்றும் பிரம்மபுரா பிரிவினர் உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT