Published : 21 Oct 2021 03:06 AM
Last Updated : 21 Oct 2021 03:06 AM
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிகளை தற்காலிகமாக ரத்து செய்ய கோரி பாஜக எம்எல்ஏக்கள் தேர்தல் துறையில் மனு அளித்தனர்.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து அதன்படி தேதிகளை அறிவித்திருந்தது. அதில் உள்ள குளறுபடிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் தேர்தல் நடவடிக்கைகளை 21-ம் தேதி வரைநிறுத்தி வைக்க சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் திரும்ப பெறப்படவில்லை.
இதை திரும்பபெறக்கோரி என் ஆர் காங்கிரஸ், பாஜக, திமுக,காங்கிரஸ், சுயேச்சை உள்ளிட்ட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸை சந்தித்து ஏற்கெனவே மனு அளித்திருந்தனர். ஆனால், அவர் நன்னடத்தை விதிகளை நீக்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அசோக்பாபு மற்றும் பாஜக நிர்வாகிகள் புதுச்சேரி தேர்தல் துறைக்கு நேற்று வந்தனர். அங்கு, மாநில தேர்தல் ஆணையர் இல்லாததால், தேர்தல் துறை அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணனிடம் இப்பிரச்சினை தொடர்பாக மனு அளித்தனர்.
அந்த மனுவில் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு, உள்ளாட்சித் தேர்தலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்த பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதுவரை தேர்தல் நடத்தை விதிகளை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இத்தேர்தலை நடத்த ஆர்வமில்லாததால் எவ்வித பணிகளையும் சரியாக செய்யவில்லை. பிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டுடன் தேர்தலை நடத்தவே எங்களுக்கு விருப்பம். தீபாவளி வரவுள்ள சூழலில் தேர்தல் நன்னடத்தை விதிகளால் வியாபாரிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் நீக்கக் கோருகிறோம். தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT