Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

மணமான பெண்ணுக்கு தாலிகட்ட வைத்து - விவசாயியை ஏமாற்றிய 5 பேர் கும்பல் கைது :

ஏற்கெனவே திருமணமான பெண்ணை விவசாயிக்கு திருமணம் செய்து வைத்து நகை மற்றும் பணத்தை பறித்து நூதன மோசடியில் ஈடுபட்ட 5 பெண்களை, குன்னத்தூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் நல்லிக்கவுண்டம்பாளையம் செட்டி தோட்டத்தில் வசித்து வருபவர் மாரப்பனின் மகன் ராஜேந்திரன் (34). விவசாயி. இவருக்கு, கடந்த பல ஆண்டுகளாக பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிறுவலூரை சேர்ந்த சந்திரன் என்பவரிடம், தனக்கு பெண் பார்க்குமாறு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, திருப்பூர் நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் அம்பிகா என்ற பெண் திருமண தரகரை, ராஜேந்திரனுக்கு சந்திரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அரியலூரை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற பெண் தரகரை ராஜேந்திரனுக்கு அம்பிகா அறிமுகம் செய்து வைத்துள்ளார். தன் வீட்டுக்கு அருகே ரீசா என்ற பெண் உள்ளதாகவும், அவரது அக்கா தங்கம், பெரியம்மா தேவி ஆகியோர் வந்துள்ளதாகவும் கூறி, ராஜேந்திரனை பெண் பார்க்க வருமாறு வள்ளியம்மாள் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 22-ம் தேதி ரீசாவை ராஜேந்திரனுக்கு நிச்சயம் செய்துள்ளனர். உடனடியாக திருமணம் செய்து கொள் என ரீசா வற்புறுத்தியதால், 24-ம் தேதி திருமணம் செய்துகொள்ள ராஜேந்திரன் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அன்று காலைபச்சாம்பாளையம் செல்லாண்டியம்மன் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம்முடிந்ததும் திருமண தரகு கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை ராஜேந்திரன், வள்ளியம்மாளுக்கு கொடுத்துள்ளார். திருமணம் முடிந்த மறுநாள் 25-ம் தேதி ராஜேந்திரன் வீட்டில் இருந்த நகைகளுடன், ரீசா மாயமானார். இதையடுத்து வள்ளியம்மாளை ராஜேந்திரன் தொடர்பு கொண்டபோது அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து அரியலூருக்கு சென்று சந்திரன் விசாரித்தபோது, ரீசாவுக்கு ஏற்கெனவே ஜெய்தர் என்பவருடன் திருமணமாகி 2குழந்தைகள் இருப்பது, தெரியவந்தது. இதையடுத்து தன்னை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற ரீசா (27), தரகர்கள் அம்பிகா (38), வள்ளியம்மாள் (45), ரீசாவின் உறவினர் தேவி (55) மற்றும் தங்கம் (36) ஆகியோர் மீது குன்னத்தூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார். இதையடுத்து 5 பேரையும் நேற்று போலீஸார் கைது செய்தனர். இக்கும்பல் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டார்களா என்பது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x