Published : 19 Oct 2021 03:06 AM
Last Updated : 19 Oct 2021 03:06 AM

தமிழகத்தில் 6-வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் - மெகா தடுப்பூசி முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறும் : சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 6-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் வரும் சனிக்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு தடுப் பூசிகள் போடப்பட்டன.

இதற்கிடையே, கடந்த 17-ம் தேதி நடைபெறவிருந்த 6-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் 23-ம்தேதி சனிக்கிழமை நடைபெற வுள்ளது.

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற மருத்துவ முகாம்களை விட அதிகமாக 50 ஆயிரம் இடங்களில் 6-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் வரும் 23-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்கிற தவறான தகவல் உள்ளது. அதனால், அவர்கள்தடுப்பூசி செலுத்திக் கொள்வதில்லை. அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை முகாம்கள் நடைபெற இருக்கிறது என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச் செயலரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவிப்பார்கள்.

மெகா தடுப்பூசி முகாம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள 12,500 ஊராட்சித் தலைவர்களுக்கும் முதல்வர் கடிதம் எழுதவுள்ளார். அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை அடைவதற்கு ஊராட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்த உள்ளார்.

தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x