Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM

முதல்வர் அறிவித்தபடி முன்கூட்டியே விடுதலை - தகுதியான கைதிகள் பட்டியல் விரைவில் வெளியீடு : சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

பெரும்பாலான சிறைவாசிகள், முதல்வர் அறிவித்தபடி, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்துள்ளனர். முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதியுடையோர் யார் என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கோவை மத்திய சிறையில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கைதிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, கைதிகளின் குடும்பத்தினர் அளித்த மனுக்களை அவர்பெற்றுக் கொண்டார். பின்னர், சிறைவளாகத்தில் வ.உ.சிதம்பரனார் நினைவாக வைக்கப்பட்டுள்ள செக்கு மற்றும் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்டஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன், முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு, அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஆய்வில்,சிறைக் கைதிகளின் கோரிக்கைகளைக் கேட்டு தெரிந்து கொண்டோம். பெரும்பாலான சிறைவாசிகள், முதல்வர் அறிவித்தபடி, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்துள்ளனர். அதற்கான நடவடிக்கையை அரசு முழுவீச்சில் எடுத்து வருகிறது.

விரைவில், முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதியுடையோர் யார் என்ற விவரத்தை உள்துறை வெளியிடும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தொடர்புடைய 7 பேர் விடுதலைக்கு முழுமுயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள எல்லா சிறைகளையும் நவீனமயமாக்க வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அவ்வாறு சிறைச்சாலைகள் நவீனமயமாக்கப்படும்போது, எல்லா கட்டிடங்களுமே புதுப்பித்து கட்டப்பட வேண்டும். இவ்வாறு கட்டப்படும் கட்டிடங்கள் சிறைக்கைதிகள் திருந்தி வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.

எல்லா மத்திய சிறைச்சாலைகளிலும் திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை முடிவு. எனவே அந்த திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு ஏற்றாற்போல் இடங்கள் தேர்வு செய்ய வேண்டும். எனவே நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, அது குறித்து அரசுதான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

கோவை மத்திய சிறைச்சாலையை இடம் மாற்றுவது குறித்து அரசு இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. எனவேசிறைச்சாலை இட மாற்றம் செய்யப்பட்டால் இங்கு செம்மொழிப் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்யும். சிறையில் உள்ள கைதிகள் அனைத்து பள்ளி பொதுத்தேர்வுகளையும் எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கைதிகள் படிக்க ஆர்வம் இருந்தால் கல்லூரி தேர்வு எழுதுவதற்கு கூட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 14 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் தண்டனை காலத்தைபூர்த்திசெய்து, எவ்வித பிரச்சினைகளும் இல்லாதவர்களை விடுவிக்க முதல்கட்டமாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

மற்றவர்களை அரசு, க்யூ பிரிவு அதிகாரிகளுடன் கலந்து பேசி யார், யாரையெல்லாம் விடுவிக்கலாம் என்று சொல்கிறார்களோ அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரப்புவர்கள் மீது ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை. எல்லோருக்கும் பொதுவான அரசாகத்தான் இந்த அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x