Published : 19 Oct 2021 03:07 AM
Last Updated : 19 Oct 2021 03:07 AM
சிறுநீரகத் தொற்றால் அவதிப்பட்டு வந்த பேரறிவாளனுக்கு சி.டி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள கடந்த மே மாதம் 28-ம் தேதி பேரறிவாளனுக்கு தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது.
இதைத் தொடர்ந்து, சென்னைபுழல் சிறையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளன் வந்தார். அதன் பிறகு 4 முறை பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தபடி அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தினசரி ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் அவர் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து, அவருக்கு சி.டி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், ஜோலார்பேட்டையில் இருந்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேரறிவாளன் நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சி.டி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து முடித்த பிறகு, மீண்டும் அவர் ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT