Published : 19 Oct 2021 03:10 AM
Last Updated : 19 Oct 2021 03:10 AM
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த திருமலை (27), என்பவர் கோவையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். அங்கு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள ஓங்கப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் (28) என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள் என்பதால் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி இரவு ஓங்கப்பாடி அருகேயுள்ள டாஸ்மாக் மதுபான கடையில் இருவரும் மதுபானம் குடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் அணைக்கட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த ஒரு கும்பல் திருமலையை கடத்திச் சென்று ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். பேரத்தின் முடிவில் ரூ.10 ஆயிரம் பணம் கொடுப்பதாக திருமலையின் நண்பர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், திருமலை கடத்தப்பட்டது குறித்து அவரது நண்பர்கள் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான தனிப்படையினர் அப்துல்லாபுரம் அருகே பணத்தை வாங்க வந்தபோது திருமலையை மீட்டனர். கடத்தல் வழக்கில் தொடர்புடைய காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கவுதம், விருதம்பட்டைச் சேர்ந்த விஷ்வா, காட்பாடியைச் சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையில், நூற்பாலை தொழிலாளி கடத்தப்பட்ட வழக்கில் தொடர் புடைய வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த கவுதம் (23), சக்திதரன் (22), விருதம்பட்டைச் சேர்ந்த விஷ்வா (21), காட்பாடி அடுத்த கண்டிப்பேடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (24) ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT