Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

தி.மலையில் சிவனடியார்கள் ஊர்வலம் :

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சிவனடியார்களின் ஊர்வலம் திருவண்ணா மலையில் நேற்று நடைபெற்றது.

கரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்தாண்டு நடைபெறவில்லை. இந்தாண்டும் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால், கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் தீபத் திருவிழாவை நடத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என பக்தரக்ள், சிவனடியார்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த வேண்டும், மாட வீதியில் சுவாமிகள் வீதியுலா மற்றும் மகா தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் நேற்று ஊர்வலம் நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு இருந்து புறப்பட்ட ஊர்வலம், மாட வீதியில் வலம் வந்து, ராஜகோபுரத்தில் நிறைவுப்பெற்றது. அப்போது, கயிலாய இசையுடன் திருமுறை ஓதி தீபத் திருவிழா நடைபெற வேண்டும் என அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டனர். இந்த பேரணியில் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டனர். இதையடுத்து, கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து கமலா பீடம் நிறுவனர் சீனுவாசன், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் சிவனடியார்கள் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x