Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது தரலாம் : முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா நேற்று கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவர்களில் சசிகலாவும் ஒருவர் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் சத்தியம் செய்யட்டும், கண் கலங்கட்டும் எங்களுக்கு என்ன.

என்னதான் ‘பில்டப்’ கொடுத்தாலும் அது செயற்கையாகத்தான் இருக்குமே தவிர, இயற்கையாக இருக்காது. அவரது நடிப்புக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்.

ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா சென்றது மக்கள் மத்தியில்எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் நினைக்கும் எதுவும்நடக்கப்போவதில்லை. சசிகலா அமமுகவில் சேரலாம். அதிமுகவில் இடம் இல்லை.

அதிமுக யானை போன்றது.அதன் மீது கொசு அமர்ந்து கொண்டு, நான்தான் யானையைதாங்கிப் பிடிக்கிறேன் என்றால் அது நகைச்சுவையாகத்தான் இருக்கும்.

அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சீமான் கருத்து

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சென்னையில் பனைச்சந்தை திருவிழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜெயலலிதா நினைவிடம் செல்வதற்கு சசிகலாவுக்கு உரிமை உண்டு. அவரது வருகையால் அதிமுகவில் தாக்கம் இருக்கும். அதேநேரம், அதிமுகவை சசிகலா கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு பழனிசாமி விடமாட்டார். சசிகலா கட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்பதால்தான் அதிமுகவினர் அவரை சந்திக்கின்றனர்’’ என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x