Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM
சென்னை மண்டலம் காஞ்சிபுரம் வடக்கு சரகத்துக்கு உட்பட்டமதுபான சில்லறை விற்பனைக் கடை எண் 4109-ல் விற்பனையாளராக பணியாற்றி வந்த எல்.துளசிதாஸ், எம்.ராமு ஆகியோர் கடந்த அக்.4-ம் தேதி இரவு பணி முடிந்து, கடையை மூடிவிட்டு வந்தபோது மர்ம நபர்கள் இவர்கள் இருவரையும் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே துளசிதாஸ் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் ராமு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், இந்த சம்பவத்தில் உயிரிழந்த துளசிதாஸ் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைதெரிவித்தார். சம்பவத்துக்கு காரணமான மர்ம நபர்களை துரிதமாக கண்டுபிடிக்கவும், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த துளசிதாஸ் மாற்றுத் திறன் பணியாளர் என்பதை அறிந்த முதல்வர், அவரது குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கவும் அவரது குடும்பத்தினரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு துளசிதாஸின் மனைவி சுமதியின் கல்வித் தகுதிக்கேற்ப, கருணை அடிப்படையில் உரிய பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமுவுக்கு உயர்தரசிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT