Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

கோவை மாவட்டத்தில் - 1,200 குக்கிராமங்களில் டெங்கு பரவல் தடுப்புப் பணிகள் தீவிரம் :

கோவை மாவட்டத்தில் டெங்கு பரவல் தடுப்புப் பணியை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 228 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் 1,200 குக்கிராமங்கள் உள்ளன. பொதுவாக, கோவையில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகளவில் இருக்கும். ஆண்டு முழுவதும் டெங்கு பரவல் தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில், டெங்கு பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்.

அதன்படி, ஊராட்சிப் பகுதிகளில் பிரத்யேக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பருவமழைக்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து, சாக்கடைகள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக ஊராட்சிப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘கிராம ஊராட்சிகளில், அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள் மூலம் சாலையை சுத்தப்படுத்துதல், சாக்கடைகளை தூர்வாருதல், தேங்கியிருக்கும் குப்பையை அகற்றுதல் போன்ற திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டெங்கு பரவலைத் தடுக்க, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் பிரத்யேகமாக சமீபத்தில் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ‘டெங்கு மஸ்தூர்கள்’ எனப்படும் இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு சென்று கொசு ஒழிப்புப் பணியை மேற்கொள்கின்றனர்.

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் காணப்படும் தண்ணீர் தேங்கும் இளநீர் கூடு, டயர் போன்ற தேவையற்ற பொருட்களை அகற்றுதல், நன்னீரில் நோய் தடுப்பு மருந்தை கலத்தல், கொசு மருந்து தெளித்தல் போன்ற பணிகளை தினமும் மேற்கொள்கின்றனர்.

மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் 1,233 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையோர சாக்கடைகள் உள்ளன. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் இலை, குப்பை சாக்கடைகளில் தேங்கி அடைப்புகள் ஏற்பட்டு, மழை பெய்யும் சமயங்களில் கழிவுநீர் செல்வதில் இடையூறு ஏற்படாமல் இருப்பதை தடுக்க, அவற்றை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியும் விரைவில் முடிக்கப்படும். மேலும், மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணி, வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x