Published : 14 Oct 2021 05:55 AM
Last Updated : 14 Oct 2021 05:55 AM

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்காக புதிய திட்டங்கள் - புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைப்பு : நலத் திட்டங்களுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புலம்பெயர் தமிழர்களுக்கான நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தமிழர்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக தமிழினம் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். வணிகம் செய்வதற்காக, வாழ்வதற்காக, வேலைகள் தேடி, கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காக, புதிய இடங்களை அறிவதற்காகவும் அவர்கள் சென்றனர். பல நோக்கங்களுக்கான இத்தகைய இடம்பெயர்வுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன.

எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழகம்தான் தாய்வீடாகும். அவர்கள் மீது அன்பு செலுத்துவதுடன், அரவணைப்பதும் பாதுகாப்பதும் தமிழகத் தின் கடமையாகும். இப்படி பல்வேறு நாடுகளுக்கு சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவிகளை செய்யவும் தமிழக அரசு முன்வந்துள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவை களை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலச் சட்டம், கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி திமுக அரசால் இயற்றப்பட்டுள்ளது. ‘புலம்பெயர் தமிழர் நலவாரியம்’ உருவாக்கி அவர்களுக்கு நலத் திட்டங்கள் செயல்படுத்தும் அறிவிப் பும் வெளியிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நலவாரியம் அமைக்க முடிய வில்லை. அடுத்து வந்த ஆட்சியாளர்களும் இதை அமைக்கவில்லை.

தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலும் இந்தியா வின் பிற மாநிலங்களிலும் வசிக்கும் தமிழர்களின் நலனுக்காக, ‘புலம் பெயர் தமிழர் நலவாரியம்’ அமைக்கப்படும். அரசு மற்றும் புலம் பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேருடன் வாரியம் அமையும். ரூ.5 கோடி மாநில அரசின் முன்பணத்துடன் ‘புலம்பெயர் தமிழர் நலநிதி’ உருவாக்கப்படும்.

மூலதன செலவினமாக ரூ.1.40 கோடி மற்றும் தொடர் செலவினமாக நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செல வினங்களுக்காக ரூ.3 கோடி ஆண்டுதோறும் ஒதுக்கப்படும்.

l புலம் பெயர் தமிழர் குறித்த தரவுத்தளம் ஏற்படுத்தப்படும். வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு விபத்து ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவ காப்பீடு திட்டம், அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.

l வெளிநாட்டுக்கு செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர் கள், பணியின்போது உயிரிழக்க நேரிட் டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

l கல்வி வேலைவாய்ப்புக்காக தமிழர் கள் புலம் பெயரும்போது பயண புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை மட்டுமின்றி ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் இந்த பயிற்சி நடத்தப்படும்.

l புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆலோ சனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலை தளம், கைபேசி செயலி ஆகியவை அமைக்கப்படும்.

l வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்களுக்கென தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.

l கரோனா பெருந்தொற்று காரணமாக 7 லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்பி யுள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக் கில் தமிழகம் திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்ய, அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்காக ரூ.6 கோடிஒதுக்கப்படும்.

l வெளிநாடு வாழ் தமிழர்களில் பெரும் பாலானவர்கள் தங்கள் சேமிப்பை தாய்நாட்டில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, இவர்களது முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஏது வான சூழல் உருவாக்கப்படும்.

l புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ஊர் மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும், ‘எனது கிராமம்’ என்ற திட்டம் தொடங்கப்படும். இதில் பள்ளி, மருத்துவமனை, நூலகம் போன்ற கட்டிடங்களை கட்டித் தரவும் சீரமைக்கவும் புலம்பெயர் தமிழர் களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இதற்கான அனைத்து ஒருங்கிணைப்பும் அரசின் சார்பில் எளிய முறையில் செய்து தரப்படும்.

l கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்று அங்கேயே நிரந்தர குடியுரிமை பெற்றுள்ள தமிழர் களின் வாரிசுகளுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாக்கவும், தமிழ் மொழியை கற்க ஏதுவாகவும், தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் குழந்தை களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி, அங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிக்க ஊக்கத்தொகை மற்றும் தமிழ் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

l புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும். இச்சங்கங்களின் மூலம் நம்முடைய கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு பரிமாற்றங்கள் நடைபெறும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படும்.

l பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர் களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக் கவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஆண்டு தோறும் ஜனவரி 12-ம் தேதி புலம் பெயர்ந்த உலகத் தமிழர் நாளாக கொண்டாடப்படும்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் பேண, புலம்பெயர் தமிழர் நலவாரியம், நலநிதியாக ரூ.6.40 கோடி, நலத்திட்டங் களுக்கு ரூ.8.10 கோடி, வெளிநாட்டில் தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு, கருத்து பரிமாற்றத்துக்கு ரூ.5.50 கோடி என மொத்தம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்படும்.

என்றென்றும் தமிழக அரசு, தமிழர் களின் வாழ்வில் ஒளியேற்றும் விளக்காக வும் அவர்களின் உற்ற தோழனாகவும் விளங்கும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x