Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கடந்த ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஒன்றியக் குழு துணைத் தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடத்தூர் அடுத்த முத்தானூர் கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் லோகிதாஸ் (எ) முனியப்பன். இவர், கடந்த ஆண்டு பொங்கல் விழாவின்போது கடத்தூரில் கரும்பு விற்பனை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியே வந்த காரில் இருந்தவர்களுக்கும், இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது எதிர் தரப்பினர் லோகிதாஸை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு வீட்டுக்குச் சென்ற லோகிதாஸ் சற்று நேரத்தில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கடத்தூர் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தற்போது, பாமக-வைச் சேர்ந்தவரும், கடத்தூர் ஒன்றியக் குழு துணைத் தலைவருமான வெங்கடதாரஅள்ளி புதூரைச் சேர்ந்த சக்திவேல் (47) என்பவரை கடத்தூர் போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT